சன்னி லியோன் ரசிகர்களுக்கு 10% தள்ளுபடியில் கறிக்கோழி: கர்நாடகா வியாபாரி அதிரடி

மாண்டியா: கர்நாடகாவில் சன்னி லியோன் ரசிகர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியில் கறிக்கோழி விற்கப்படும் என்று அவரது ரசிகர் ஒருவர் விளம்பரப்படுத்தி வியாபாரம் செய்து வருகிறார். கர்நாடகா மாநிலம் மாண்டியா நகரில் பிரசாத் என்பவர் கறிக்கோழிக் கடை நடத்தி வருகிறார். பாலிவுட் நடிகை சன்னி லியோனின் ரசிகரான இவர், தனது கடையின் முகப்பில் பேனர் ஒன்றை வைத்துள்ளார். அதில், தனது கடையில் கறிக்கோழி வாங்கும் சன்னி லியோன் ரசிகர்களுக்கு, 10 சதவீதம் தள்ளுபடியில் கறிக்கோழி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையறிந்த மக்கள் அவரது கடைக்கு திரளாக வந்து கறிக்கோழியை வாங்கிச் செல்கின்றனர். கூட்டம் அலைமோதியதால் கடைக்கு வரும் அனைவரும் தாங்கள் சன்னி லியோன் ரசிகர் என்று கூறி 10 சதவீத தள்ளுபடியில் வாங்கிச் செல்கின்றனர். அதனால் சன்னி லியோன் ரசிகர்களை கண்டறிய, சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அதன்படி, ‘சன்னி லியோனின் சமூக வலைதளமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை தொடர வேண்டும். சன்னி லியோனின் குறைந்தது 10 புகைப்படங்களையாவது தங்கள் செல்போன்களில் சேமித்திருக்க வேண்டும். சன்னி லியோன் வெளியிடும் படங்களுக்கு தனது சமூக ஊடக கணக்கில் இருந்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் செய்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். மேற்கண்ட நிபந்தனைகளை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே தனது கடையில் கறிக்கோழி வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியில் கறிக்கோழி கிடைக்கும் என்று பிரசாத் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சன்னி லியோன் எனக்கு பிடித்த நடிகை. அவர் பல அநாதை குழந்தைகளை காப்பாற்றுகிறார். அவரது சேவையை பாராட்டும் வகையில் தள்ளுபடியில் கறிக்கோழியை விற்கிறேன். அதனால்தான் சன்னி லியோனின் ரசிகர்களுக்கு இந்த சலுகையை அறிவித்துள்ளேன். சன்னி லியோனின் ரசிகர்களுக்கு ஆண்டு முழுவதும் இந்த சலுகை விலையில் கறிக்கோழி விற்பேன்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.