புஜ்: ‘ஒன்றிய அரசின் கொள்கையால் 10 ஆண்டுகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையில் இந்தியா சாதனை படைக்கும்,’ என்று பிரதமர் மோடி கூறினார்.குஜராத் மாநிலம், புஜ் நகரில் கட்ச் லேவா படேல் சமாஜம் அமைத்துள்ள கே.கே.படேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் மோடி, நேற்று காணொலி மூலமாக திறந்து வைத்தார். இதில், அவர் பேசியதாவது: நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட புஜ் மக்களுக்கு முதன்முறையாக கிடைத்துள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை புதிய விதியை எழுதியுள்ளது. இந்தியாவில் தோன்றிய யோகா மற்றும் ஆயுர்வேதம் ஆகியவை தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் அதன் ஆரோக்கிய நன்மைகளை அறிந்ததால்தான், இந்தியாவில் இருந்து மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.ஏழைகளுக்கு தரமான சிகிச்சை குறைந்த செலவில் கிடைத்தால், அரசு அமைப்புளின் மீதான அவர்களின் நம்பிக்கை வலுப்பெறும். சிகிச்சைக்கான செலவு பற்றிய கவலையிலிருந்து அவர்கள் விடுபடுவார்களேயானால், அவர்கள் மேலும் உறுதிப்பாட்டுடன் கடினமாக உழைத்து, வறுமையிலிருந்து விடுபடலாம்.நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லுாரி அமைக்கும் கொள்கையை ஒன்றிய அரசு வகுத்துள்ளது. இதனால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின் மருத்துவர்கள் எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை படைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.30ம் தேதி முதல்வர்கள் மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தவும், திட்டங்கள் செயல்படுத்துதல் குறித்து கலந்துரையாடவும் மாநில முதல்வர்கள் மாநாடு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2006ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து, கடந்த 2016ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாநாடு, வரும் 30ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.