தந்தைக்கு உதவியாகப் பனையேறும் சிறுமி.!

விழுப்புரம் மாவட்டம் நரசிங்கனூரில் தந்தையின் தொழிலுக்கு உதவியாக ஒன்பதாம் வகுப்பு மாணவி பனையேறிப் பதநீர் இறக்கி வருகிறார்.

விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ள நரசிங்கனூரில் 150க்கு மேற்பட்ட குடும்பத்தினர் பாரம்பரியமாகப் பனைத்தொழில் செய்து வருகின்றனர்.

பனை ஓலை பின்னுதல், கருப்பட்டி தயாரித்தல், பதநீர் இறக்குதல், நுங்கு, பனங்கிழங்கு விற்பனை, பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற தொழில்களைச் செய்து வருகின்றனர்.

நரசிங்கனூரில் பாண்டியன் என்பவரின் மகள் கரிஷ்மா, அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தச் சிறுமி பள்ளி செல்லும் நேரத்துக்கு முன்னும், பள்ளிக்குச் சென்று வந்த பிறகும் தந்தைக்கு உதவியாகப் பனையேறும் தொழில் செய்து வருகிறார்.

ஏணி, காப்புக் கயிறு, அரிவாள் பெட்டி, பதநீர்க் குடுவை என அனைத்தையும் எடுத்துச் சென்று ஒவ்வொரு பனையிலும் துணிச்சலாக ஏறிச் சென்று பதநீரை இறக்குவதுடன் பாளையையும் சீவி விடுகிறார்.

தந்தைக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமே, ஆண்கள் மட்டுமே செய்து வந்த கடினமான தொழிலைத் தானும் செய்வதற்குத் தூண்டுதலாக இருந்ததாக மாணவி கரிஷ்மா தெரிவிக்கிறார்.

பனைத் தொழிலில் பதநீர் இறக்குதல், கருப்பட்டி தயாரித்தல், ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்தல் எனப் பல்வேறு தொழில்களைக் குடும்பத்துடன் ஒருங்கிணைந்து செய்து வருவதாகக் கூறுகிறார் பனையேறும் தொழிலாளி பாண்டியன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.