சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் மிகவும் விசேஷமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதே போன்று வைணவ கோயில்கள் மற்றும் இதர தெய்வங்களின் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள், விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
மற்ற பௌர்ணமி தினங்களை காட்டிலும் சிறப்புகள் வாய்ந்த இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு.
இத்தகைய பௌர்ணமியானது இந்த வருடம் சனிக்கிழமை 16.04.2022ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. சித்ரா பௌர்ணமியன்று பல இடங்களில் கிரிவலம் செல்லும் நிகழ்வு நடந்தாலும், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரரை பக்தர்கள் பக்தியோடு சுற்றி வரும் நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தனை சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலை கிரிவலம் பற்றி பார்க்கலாம் வாங்க…
திருவண்ணாமலை கிரிவலம் :
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது.
பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் மற்றும் ஈசான்யலிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிஷி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகளும் அமைந்துள்ளன.
எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது. இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த மலையின் சுற்றளவு 14 கி.மீ உள்ளது. மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும். ஏனென்றால், மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம்.
கிரிவலம் செல்லும்போது நமசிவாய, சிவாயநம அல்லது தேவாரம், திருவாசகம் உச்சரிக்க வேண்டும். அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது.
கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும். அவசரமாகவோ, வேகமாகவோ அல்லது மற்றவர்களை இடித்து கொண்டோ செல்லக்கூடாது.
பலன்கள் :
அருணாச்சலத்தை வலம் வருகிறேன் என்று சொன்னாலே பாவம் தீரும்.
வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி பாவமும் நீங்கிப் போகும்.
மலையை வலம் வருவதால் பல்வேறு நன்மைகளும், பலன்களும், வீடுபேறும் கிடைக்கப்பெறும்.