புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பரவலின் வேகம் குறைந்திருந்த நிலையில் தற்போது டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் மீண்டும் நோய்த்தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. டெல்லியில் பள்ளி மாணவர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படாவிட்டாலும் பரவல் அதிகரித்து வருவது கவலைக்குரியது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். மீண்டும் நோய் பரவுவதற்கு காரணம், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் கைவிட்டதுதான் என அவர்கள் கூறுகிறார்கள்.
டெல்லியில் தற்போது பரவும் தொற்று, டெல்டா போன்ற அபாயகரமான தொற்று அல்ல என்றாலும், பரவும் தன்மை ஒமைக்ரானை விட வேகமாக இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, நோய்த்தொற்றின் தீவிர சூழ்நிலையை தவிர்க்க முழுமையான தடுப்பூசி எடுத்துக் கொள்ளுதல், முக கவசம் அணிதல், சமூக விலகல் மற்றும் வழக்கமான சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடித்தல் அவசியம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.