நாடோடிச் சித்திரங்கள்: வரலாற்றில் சுவாரஸ்ய இடைச்செருகல்கள் |தேவகிரி (எ) தெளலதாபாத் கோட்டை | பகுதி 30

மகாராஷ்டிரா பள்ளியில் பணியாற்றிய சில நாள்களில் ராஜ்யஶ்ரீ என்பவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. ஜல்காவ் மாவட்டத்தின் புசாவல் பகுதியை சேர்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அவர். மகாராஷ்டிரா என்றால் மும்பை, புனே, கோவா ஆகிய இடங்களைத் தவிர்த்து வேறு இடங்களைப் பற்றி பெயரளவில் கூட தெரிந்திராததால் ராஜ்யஶ்ரீயின் நட்பு மகாராஷ்டிரா மாநிலம் மக்கள் வாழ்வியல் குறித்து ஆழ்ந்து அறிந்து கொள்ள முடிந்தது.

ஒருமுறை பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்களிடம் சோழர்களின் அடையாளமான தஞ்சை பெரிய கோயிலின் கட்டுமான வல்லமைக் குறித்து பேசிக் கொண்டிருந்த பொழுது, அவ்வழியே கடந்து சென்ற ராஜ்யஶ்ரீ என்னை இடைமறித்து “உங்கள் சோழர் பாண்டியர்களுக்கு சற்றும் சளைத்தவரல்லர் எங்கள் சத்ரபதி சிவாஜி, அவர் பெயரை உச்சரித்தால் பிறந்த குழந்தை கூட கைகளில் வாளேந்தி போர்க்களம் செல்லத் துணியும்” என்று கூறிவிட்டு சென்றார். அவர் என்னை இடைமறித்து அவ்வாறு கூற வேண்டியதன் அவசியம் என்ன என்று சற்று நேரம் ஆராய்ந்துப் பார்த்தேன். மனிதன் தனது வரலாற்றைக் குறித்தும், முன்னோர்கள் குறித்தும் பெருமிதம் கொள்வதையே பெரும்பாலும் விரும்புகிறான். மனித வரலாற்றுக்கு பல முகங்கள் உண்டு. அவற்றில் சில கொடூரமான முகங்களுமுண்டு.

ராஜ்யஶ்ரீயிடம் இதைப்பற்றி பேசிய பொழுது அவர் சிரித்தார். “யார் இவ்வளவு யோசிக்க போகிறார்கள். நமக்குத் தேவை அடையாளங்கள். வரலாறு அதை வாரி வழங்குகிறது. அதை சூடி கொள்கிறோம் அவ்வளவுதான்” என்றார்.

தேவகிரி கோட்டை

‘அடையாளம்’ எனும் சொல்லை அடைப்புக் குறிக்குள் எழுதிப் பார்த்தேன். அவை அச்சொல்லின் தலைக் கொம்புகளாக மாறுவது போல் கற்பனையாக தோன்றியது. வரலாற்றை திரித்து கூறும்பொழுது அங்கு உண்மை அழிந்து போகிறது. நான் படித்த கான்வென்ட் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் ஆங்கிலேயர்களை பெருமைப் படுத்தும் விதமாக வரலாற்று பாடங்கள் இயற்றப்பட்டிருந்தன. ஏன் எதற்கு என்ற கேள்விகளில்லாமல் அவற்றை உண்மையென்று நம்பி படித்த நாள்களுமுண்டு. என் சிந்தனையை தூண்டிய ராஜ்யஶ்ரீயை என்னுடன் ஒளரங்காபாத் வருமாறு அழைத்தேன். “உங்கள் ஊரின் கதைகளை நீங்கள் கூறி கேட்க விழைகிறேன்” என்றேன். புசாவலில் தனது பிறந்த வீட்டிற்கு செல்வதால் ஒருநாள் மட்டும் எங்களுடன் செலவிடுவதற்கு சம்மதித்தார் ராஜ்யஶ்ரீ. அஜந்தா பயணம் கொடுத்த பரவசத்திற்கு சற்றும் குறையாமலிருந்தது தேவகிரி கோட்டை மற்றும் எல்லோரா பயணம்.

மறுநாள் காலை நாங்கள் தங்கும் விடுதிக்கு தனது காரில் வந்து சேர்ந்தார் ராஜ்யஶ்ரீ. மராட்டிய பெண்களுக்கே உரிய பெண்மை மீறாத அறிவும் அழகும் சரிவிகிதத்தில் அமைந்திருந்த பெண் அவர். அவரின் நெடிய கருங்கூந்தலை பராமரித்து பாதுகாக்க அவரது தாயார் மாதமிருமுறை புனே வந்து செல்வாராம். அவரின் குரலின் செருக்கு எனக்குப் பிடித்திருந்தது. அவரின் கூந்தலைப் போலவே அடர்த்தியான செருக்கு அது.

ஒளரங்கபாதிலிருந்து எல்லோரா செல்லும் வழியில் சில கிலோமீட்டர் தொலைவில் தேவகிரி மலை மீது பிரமாண்டமாக நிற்கும் தேவகிரி( தியோகிரி) கோட்டையை பார்த்துவிட்டு எல்லோராவிற்கு செல்லலாம் என்று அறிவுறுத்தினார் ராஜ்யஶ்ரீ. மனம் முழுதும் எல்லோரா பற்றிய எண்ணங்கள் நிறைந்திருந்ததால் வேறெந்த இடத்திற்கும் செல்ல ஆவல் இல்லாதிருந்தது. அதை அவரிடம் வெளிப்படுத்தவும் செய்தேன். ராஜ்யஶ்ரீ விடாப்பிடியாக பேசினார்.

தேவகிரி கோட்டை

“இடைக்கால இந்திய வரலாற்றின் முக்கியமான தடயங்களை சுமந்திருக்கும் தேவகிரி எனும் தெளலதாபாத் கோட்டையை நீங்கள் நிச்சயம் காண வேண்டும். அஜந்தா எல்லோராவிற்கு ஒப்பான சரித்திர சான்றுகள் பலவற்றை தாங்கி நிற்கும் கோட்டை அது என்பதை நீங்கள் அங்கு உணர்வீர்கள்” என்றார்.

எங்கள் பயணம் தெளலதாபாத் கோட்டையை நோக்கி தொடர்ந்தது. யாதவ வம்சத்தினரால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட்ட தேவகிரி கோட்டை அவர்களுக்குப்பின் தில்லி சுல்தான்களால் கைப்பற்றப்பட்டது. சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் முதன்மை அடிமைத் தளபதி மாலிக் கஃபூரின் நேரடி மேற்பார்வையில், இந்த கோட்டை சுல்தான்கள் தென்னிந்தியாவை கைப்பற்ற மேற்கொண்ட உத்திகளின் தரைத்தளமாக இருந்ததெனலாம். துக்ளக் வம்சத்தினரின் ஆட்சியில் முகம்மது பின் துக்ளக், இந்தியாவின் தலைநகரையே தில்லியிலிருந்து தெளலதாபாதிற்கு மாற்றி உத்தரவிட்டார்.

ஒரு நாட்டை அதன் மத்தியப் பகுதியிலிருந்து ஆள வேண்டும் என்ற வேடிக்கையான சட்டமொன்றை இயற்றி, தில்லி சுல்தானேட் பகுதி மக்களையும், அரசு அலுவலகங்களையும் தெளலத்தாபாதிற்கு இடம்பெயருமாறு உத்தரவிட்டார். பல்லாயிரக்கணக்கானோர் தில்லியிலிருந்து தெளலதாபாதிற்கு இடம்பெயர்ந்தனர். கோடை காலத்தின் வெம்மை தாளாததால் சில மாதங்களிலேயே மீண்டும் தில்லிக்கு திரும்பி அதையே தலைநகராக அறிவித்தார் துக்ளக். இந்திய வரலாற்றின் வேடிக்கையான அரசராக துக்ளக் இன்றும் அறியப்படுகிறார்.

தேவகிரி கோட்டை

காலை உணவாக மராட்டிய சிறப்புணவான வடாபாவ் மற்றும் தாபேலி சாப்பிட்டோம். “நன்றாக சாப்பிடுங்கள், கோட்டையைச் சுற்றி வர சக்தி வேண்டுமல்லவா, இராட்சத கோட்டை அது” என்றார் ராஜ்யஶ்ரீ.

கோட்டையை அடிவாரத்திலிருந்து பார்த்தபொழுதே அவர் கூறியது உண்மை என்று புரிந்தது. “இன்று முழுவதும் இங்கேயே கழிந்து விடும் போலிருக்கிறதே, எல்லோரா போகமுடியாதா” என்றேன். “வரலாறும் கலையும் உங்களுக்கு ஆர்வமானவையென்றால் தேவகிரி கோட்டை உங்களுக்காக பல கதைகள் வைத்திருக்கிறது. அவற்றில் சில நானுமறிவேன். அதை உங்களுக்கு கூறுவேன்” என்று கண்கள் சிமிட்டினார் ராஜ்யஶ்ரீ. அவர் கூறுவதற்கு மறுப்பு கூற விடாத அழைப்பை அந்த பார்வை வெளிப்படுத்தியது.

தேவகிரி கோட்டையின் நுழைவாயிலே கோட்டையின் வெளியேறும் வழியுமாகும். மற்ற கோட்டைகள் போல் திசைக்கொரு வாசல் இங்கு கிடையாது. கோட்டையை முற்றுக்கையிடும் பகைவர்கள் வேளியேறும் வழி நோக்கி கோட்டையினுள்ளே முன்னேறிச் செல்லும் பொழுது அவர்களை எதிர்த்து அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட உத்தி அது. அதேபோல் எதிரிகளை திசைதிருப்பும் வண்ணமாக கோட்டையின் இடப்புறம் வேளியேறும் வழி இருப்பது போல் ஒரு அமைப்பு இருக்கிறது. அவ்வாயிலின் வழி செல்பவர்கள் முதலைகள் நிரம்பிய அகழியில் விழுந்து மடிந்தனர்.

கோட்டையின் உச்சியை அடைவதற்கு ஒரு உலோக பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நேரத்தில் இருவர் மட்டுமே செல்லக்கூடிய அளவு குறுகலான பாலம் அது. அப்படி ஒன்றன்பின் ஒன்றாக வருபவர்களை கோட்டை உச்சியிலிருந்து அம்புகள் எய்தி கொல்வதும் அகழியில் விழச்செய்து கொல்வதும் போர்முறைகளாக கடைபிடிக்கப்பட்டன. ராஜ்யஶ்ரீ விளக்கிய அத்தனை விஷயங்களும் காட்சிகளாக கண்முன் விரிந்தன.

கருணை அன்பு மன்னிப்பு போன்ற உணர்வுகளுக்கு அக்காலங்களில் என்ன பொருள் இருந்திருக்கும் என்று சிந்திக்கலானேன். மனிதனை மனிதன் கொன்றழிப்பதற்காக எத்தனை வழி வகைகள் சிந்தித்து அதை சாத்தியப்படுத்தியிருக்கிறான் என்று நினைத்துப் பார்க்கும் பொழுது உடல் சில்லிடுவதை உணர முடிந்தது. “பயத்தால் மட்டுமே உலகை ஆள முடியும்” என்று எத்தனை மன்னர்கள் முழங்கி சென்றிருக்கின்றனர். பயம் மட்டுமே நம்மை காப்பாற்றும் சிறந்த ஆயுதம் என்று எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது.

தேவகிரி கோட்டை

கோட்டையில் ஆங்காங்கே திறந்த வெளி அரங்குகள், யானைகள் நீரருந்தும் கிணறுகள், சாந்த் மினார் என்கிற அழகிய ஸ்தூபி என்று பலவகையான கலைநயமிக்க இடங்கள் நிறைந்திருந்தன. தில்லியிலுள்ள குதூப் மினாரின் அழகில் மயங்கிய பாஹ்மனி அரசர் தனது ஆட்சி காலத்தில் அதே போல் தெளலதாபாதில் ஒன்று இருக்க வேண்டுமென்று விரும்பி சாந்த் மினாரை நிறுவினாராம். கடந்த சில வருடங்களாக அங்கு நிகழும் தொடர் தற்கொலைகளால் அவ்விடம் சுற்றுலா வாசிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ராஜ்யஶ்ரீ கூறிய வரலாற்று கதைகளை கேட்டபடியே கோட்டையின் உச்சியை அடைந்தோம். பாதை செங்குத்தாக மாறியது. மேற்கொண்டு நடப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. மூச்சிரைத்தபடி படியேறிய என்னிடம் ராஜ்யஶ்ரீ “மனந்தளராமல் வாங்க, இவ்விடத்தில் நிகழ்ந்தேறிய அமர காதல் கதை ஒன்று உங்களுக்கு சொல்கிறேன்” என்றார். இழந்த சக்தியெல்லாம் மீண்டும் கிடைத்தது போன்ற உணர்வு எனக்கு. “மனிதர்களை கொலை செய்யும் பாறைக் கோட்டையில் காதல் கதையா” என்று ஆர்வமாக கேட்டேன்.

கோட்டையின் உச்சியில் படிக்கட்டுகளில் இடைவெளி அதிகரித்தன. செங்குத்தான இருண்டு வளைந்த வழிகள் அவை. ஒரு வழியில் நுழைந்தால் எவ்வழியில் வெளியேறுவது என்று அறியா வண்ணம் பரமபத வளைவுகள் போல் அவ்விடம் இருந்தது. அங்கு ஒரு நிலவறை போல் தோற்றம் கொண்ட அறை இருந்தது. அது முக்கோண வடிவிலிருந்தது. காற்றுப்புக முடியாத இருண்டு போன அவ்வறைக்குள் நுழைந்ததுமே உடல் வியர்த்து மூச்சு முட்டியது. “இங்குதான் ஒரு பெண், கோட்டையில் காவல் தொழில் செய்து வந்த தனது காதலுனுக்காக ஒவ்வொரு இரவும் வந்து காத்திருந்தாளாம்”

“அவள் பெயர் என்ன” என்றேன் ஆர்வமாக

“ஏன் பெயர் அவ்வளவு முக்கியமா”

“ஆம் எனக்கு முக்கியம். நான் மனிதர்களை அவர்களது முகங்களை கூட மறந்து விடுவேன் ஆனால் அவர்களுது பெயர்கள் மனதில் நிலைத்து நிற்பவை அல்லவா” என்றேன்.

தேவகிரி கோட்டை

“சரி அந்த பெண்ணின் பெயரை உங்கள் பெயரென்றே வைத்துக் கொள்ளுங்கள். நான் என் பெயரை சூட்டிக் கொள்கிறேன்” என்று சிரித்தார் ராஜ்யஶ்ரீ.

“கற்பனைக் கதைக்குள் நாம் புகுந்து விளையாடலாம்” என்றார்.

பல மாதங்களாகியும் வீடு திரும்பாத தனது காதலனை காணும் ஆவலில் பல தூரம் பயணித்து வந்த அவள், மலைகள் தாண்டி , அகழியின் முதலைகளிடமிருந்துத் தப்பித்து, மற்றவர் பார்வையிலிருந்தும் தப்பித்து கோட்டை உச்சியின் நிலவறையில் அவனுக்காகக் காத்திருந்தாள். வியர்வையில் குளித்த அவளது உடற்வாசத்தை ஒருவாறு முகர்ந்துணர்ந்த அவளது காதலன், அவளைத்தேடி கோட்டை முழுதும் பித்துப் பிடித்தவன் போல் தேடியலைந்து பின்பு நிலவறையில் அவள் ஒளிந்திருப்பதை காண்கிறான்.

மூச்சு விட முடியாமல் வியர்வையில் நனைந்திருந்த அவளை அள்ளியணைத்து கோட்டை மதில்கள் அதிரும்படி முத்தமிட்டு புணர்ந்தான். அவர்கள் இரகசியமாக சந்திப்பது குறித்த செய்தியறிந்ததும் அரசன் அவனுக்கு பகைவர்களின் ஒற்றன் என்று தீர்ப்பளித்து மரண தண்டனை விதித்தான். அவன் மரணிக்கப் போகிறான் என்பதை கேள்வியுற்ற காதலி, அன்றிரவும் அவனை சந்திக்க வந்தாள். அவனும் அவளுடன் அளவாவி வழியனுப்ப ஆயத்தமானான். “நிலவறை விட்டு வெளியே வா, காற்று வீசுமிடத்தில் அமர்வோம்” என்றான்.

“நீ நிலவறைக்குள் வா. நான் ஆடைகளை துறந்து விட்டேன்”என்றாள் அவள்.

காதலனுக்கு அவளது அழைப்பின் செய்தி புரிந்து விட்டது. அவர்களிருவரும் காற்றுப் புக முடியாத அந்நிலவறையில் கூடிக்களித்தனர், கூடி மயங்கினர், கூடி மடிந்தனர்.

“அவர்களிருவரின் ஆன்மாக்கள் இங்கு உலவுவதாக சிலர் கூறுவர். அதனாலேயே இந்த உயரம் வரை பெரும்பாலும் யாரும் வருவதில்லை” என்றார் ராஜ்யஶ்ரீ.

“நாம் ஏன் இங்கு வந்தோம்” என்றேன்.

“நீங்கள் இந்த நிலவறையை பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது” என்றார்.

“ஏன் அப்படி தோன்றியது உங்களுக்கு”

“நீங்கள் என்றாவது இந்த காதல் போல் ஒரு நிலையடையும் பொழுது இவ்விடத்தை நினைவுப் படுத்தி எழுதுவீர்கள் அல்லவா அதற்காகத்தான்” என்றார் ராஜ்ய ஶ்ரீ.

“அந்த காதல் போல் ஒரு காதல் வாய்க்கும் நாளில் நிச்சயம் எழுதுவேன்” என்று மனதோடு கூறிக்கொண்டேன்.

இன்று அதை எழுதி விட்டேன்.

மராட்டிய நில வரலாற்று பயணங்கள் தொடரும்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.