ஷங்கர், ராஜமவுலி வரிசையில் பிரசாந்த் நீல்

சினிமா என்பது இயக்குனர்களின் மீடியம் தான். அவர்களது கற்பனையில், கருத்தாக்கத்தில் தான் ஒரு படம் உருவாகிறது என்பது அனைவருக்குமே தெரியும். இயக்குனர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களிடம் தங்களை ஒப்படைக்கும் ஹீரோக்கள்தான் மிகப் பெரிய வெற்றியையும், பெயரையும் பெறுகிறார்கள்.

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சினிமா நடிகர்களின் கைகளில் சென்றுவிட்டது. நடிகர்கள் கை காட்டும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்தான் படங்களை எடுக்கிறார்கள். படத்தில் நடிக்கும் ஹீரோவுக்குப் பிடிக்கவில்லையா வசனத்தை மாற்றுகிறார்கள், காட்சிகளை மாற்றுகிறார்கள், ஏன் கதையையே மாற்றுகிறார்கள்.

தெலுங்கு, கன்னட, மலையாள சினிமாக்களில் இப்போதும் இயக்குனர்களக்குத்தான் அதிக மரியாதை. அவர்களை நம்பி தங்களை ஒப்படைத்தவர்கள் இன்று இந்திய அளவில் புகழ் பெற்று பான்–இந்தியா ஹீரோக்களாக உயர்ந்து நிற்கிறார்கள்.

தென்னிந்திய சினிமாவில், குறிப்பாக தமிழில், பிரம்மாண்டத்தை ஆரம்பித்து வைத்தவர் இயக்குனர் ஷங்கர். அவரை முன்னுதாரணமாக வைத்து தெலுங்கில் படங்களை இயக்க ஆரம்பித்தவர் ராஜமவுலி. 'பாகுபலி 1, 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் வெற்றி மூலம் இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராக மாறிவிட்டார். அவர்களது வரிசையில் 'கேஜிஎப் 1, 2' இயக்குனர் பிரசாந்த் நீல் இடம் பிடித்துவிட்டார்.

தென்னிந்திய சினிமா இயக்குனர்கள், இந்திய சினிமா இயக்குனர்களாக உயரந்து புதிய சாதனைகளை படைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.