பிரம்மாண்டத்தை காட்டும் ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2‘: படக்குழுவை பாராட்டிய தமிழ் நடிகர்கள்

தமிழ் திரையுலக நடிகர்களான கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோர், நடிகர் யஷ் நடிப்பில் வெளியான ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தை பாராட்டி, தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’, இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை கன்னட திரைப்பட உலகம் மீது இருந்த பிம்பத்தை இந்தப் படம் உடைத்தெறிந்தது. இதையடுத்து, ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும், திரையரங்குகளில், ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படம் வெளியானது. படம் வெளியானது முதல் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். வசூல்ரீதியாக இந்திய அளவில் பெரும் சாதனை படைத்து வசூல் வேட்டை இந்தப் படம் நடத்தி வருகிறது. இந்திய திரையுலகத்தை வாயடைக்க செய்துள்ளது இந்தப் படத்தின் பிரம்மாண்டம் மற்றும் வசூல்.

image

இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, ‘கே.ஜி.எஃப்.’ படக்குழுவை பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஒரு விஷயத்தை மிகப் பெரியதாக கற்பனை செய்யத்துணிந்து, அதனை தனி பாணியில் முழுமையாக அர்ப்பணித்து வழங்கினால், நிச்சயம் அந்த விஷயம் மிகப்பெரிய கைத்தட்டலை பெறும். ஒரு தாய் கண்ட கனவின் சக்தியை அடிக்கோடிட்டு காட்டுவதுபோல் படம் மிக அருமையாக உள்ளது. மேலும், காட்சி அமைப்புகள், வசனங்கள் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகள், படத்தின் பிரம்மாண்டத்தை உயர்த்தி காண்பித்து வியக்க வைக்கிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்!!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

image

இதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “படம் மிகப் பெரிய வெற்றியடைய நடிகர் யஷ், இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மேலும் பல சாதனைகளை படைக்கட்டும்”  இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.