ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் குடிபோதையில் குருத்வாராவில் நுழைந்ததாக குற்றஞ்சாட்டியிருந்தது. பைசாகி என்பது பஞ்சாப் மற்றும் சீக்கிய மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. அது கடந்த ஏபரல் 14-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது. இதற்கு பஞ்சாப் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஜக இளைஞரணி தேசிய செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா (Tajinder Pal Singh Bagga) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “குடிபோதையில் குருத்வாரா தம்தாமா சாஹிப்பிற்குள் நுழைந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். பகவத் மான் பஞ்சாப் முதலமைச்சரான பிறகு இவரின் மீது முதல் முறையாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.