திரிணாமூல் கட்சிக்கு வரலாற்று வெற்றியை தேடித் தந்த சத்ருகன் சின்ஹா!

பிரபல நடிகர்
சத்ருகன் சின்ஹா
பீகார் மாநிலம் பாட்னா தொகுதி பாஜக எம்.பியாகவும், அக்கட்சியின் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். பிரதமர் மோடியையும், கட்சி தலைமையையும் தொடர்ந்து விமர்சித்து வந்த அவர், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன்பிறகு காங்கிரஸில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியின் இருந்து விலகி
திரிணாமூல் காங்கிரஸ்
கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில், மேற்குவங்கத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிகாரின் போச்சான், மராட்டியத்தின் கோலாப்பூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்றது.

அசன்சோல் மக்களவை தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சத்ருகன் சின்ஹாவும், பாலிகங்கே சட்டமன்றத் தொகுதியில் பாஜகவில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாபுல் சுப்ரியோவும் களம் கண்டனர். அசன்சோல் தொகுதியில் பாஜக எம்.பி.யாக இருந்த
பாபுல் சுப்ரியோ
தனது பதவியை ராஜினாமா செய்ததால் அத்தொகுதி காலியானது. அத்தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்தான் திரிணாமூல் சார்பில் சார்பில் சத்ருகன் சின்ஹா களமிறக்கப்பட்டார். பாபுல் சுப்ரியோவுக்கு பாலிகங்கே சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்ருகன் சின்ஹா வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா பவுலை விட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், அத்தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது முதல் தேர்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல், பாபுல் சுப்ரியாவும் பாலிகங்கே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோன்று, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) போச்சாஹான் சட்டமன்றத் தொகுதியில் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சத்தீஸ்கரின் கைராகர், மராட்டியத்தின் கோலாப்பூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.