தமிழக அரசு இடம் ஒதுக்கியதும் கடற்பாசி பூங்கா அமைக்கும் பணி தொடங்கும்:  மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

தூத்துக்குடி: தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள கடல்பாசி வளர்க்கும் சிறப்பு பூங்காவுக்கு நிலம் தேர்வு செய்ய தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது. அரசு நிலம் ஒதுக்கியதும், பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பிரதமர் மோடியின் தலைமையிலான இந்த அரசு மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி, அவர்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ராமேஸ்வரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் மீன் வளத்தை அதிகப்படுத்தும் வகையில் தரமான மீன் குஞ்சுகளை கடலில் விட்டு வளர்க்கும் திட்டம் பிரதமரின் மத்திய சம்படா யோஜனா திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் குளிர்பதனக் கிடங்கு அமைத்தல், மீன் பதப்படுத்தும் நிலையம் அமைத்தல், ஆழ்கடல் மீன் வளர்ப்பு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மத்திய அரசு மீனவர்களுக்கு,1,500 ரூபாய் வழங்குகிறது. மீனவர்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு, தமிழகத்திற்கு அனைத்து திட்டங்களையும் வழங்கி வருகிறது.நெடுஞ்சாலை, அனைவருக்கும் வீடு திட்டம், ஜல் ஜீவன் மிஷன், மருத்துவக்காப்பீடு, முத்ரா கடன் உதவி, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி என, மத்திய அரசின் திட்டங்களில் அதிக பயனாளிகள் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் மீனவர்களின் நலனுக்காக கடல்பாசி வளர்ப்பதற்காக சிறப்பு மண்டலம் அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். தமிழக அரசு இடத்தினைத் தேர்வு செய்து அனுப்பிய பின்னர் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்” என்று அவர் தெரிவித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.