காங்கிரஸ் இணையும் பிரஷாந்த் கிஷோர்!

பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பிரபல அரசியல் உத்தியாளர்
பிரஷாந்த் கிஷோர்
ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான பல்வேறு கட்சித் தலைவர்களையும் அவர் அடுத்தடுத்து சந்தித்தார். இதனிடையே, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில்
காங்கிரஸ்
கட்சிக்காக அவர் ஒப்பந்தம் செய்யவுள்ளார் என்றும், காங்கிரஸ் கட்சியில் அவர் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த அவர் பல திட்டங்களை வகுத்துள்ளதாகவும், பிரஷாந்த் கிஷோர் வழிகாட்டலின்படி, கட்சியை நடத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் அளித்து விட்டதாகவும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. அதன்படி, காங்கிரஸ் கட்சியில் உயர்ந்த பதவியை அவர் எதிர்பார்த்து காத்திருந்ததற்கிடையே, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பிரஷாந்த் கிஷோரின் வருகையை ரசிக்கவில்லை என்றும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியையும், அது செயல்படும் விதத்தையும் பிரஷாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்து வந்தார். கடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காக அவர் பணியாற்றினார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபலும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பின் போது, எதிர்வரவுள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தல்,
2024 மக்களவை தேர்தல்
உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக, பிரசாந்த் கிஷோர் வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாகவும், ஆனால் கட்சியில் குறிப்பிட்ட பதவி எதையும் அவர் கேட்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி 370 தொகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்தும், உ.பி., பிகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தணித்தும் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியிடம் தெரிவித்துள்ளதாகவும் ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பிரசாந்த் கிஷோர் 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் தலைவரிடம் விளக்கத்தை அளித்துள்ளார். அவர் முன்வைத்த திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைக்கும் குழு கவனித்து இறுதி முடிவை ஒரு வாரத்தில் கட்சி தலைவரிடம் அறிக்கை சமர்பிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.