மும்பை: பிரபல டி.வி நிகழ்ச்சி தயாரிப்பாளரும், இந்தியில் வெளியான ‘கோல்மால்’ உள்பட பல படங்களில் நடித்தவருமான மஞ்சு சிங் (74), மாரடைப்பு காரணமாக மும்பையில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பாடலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான ஸ்வானந்த் கிர்கிரே, ‘இப்போது மஞ்சு சிங் நம்முடன் இல்லை. என்னை டெல்லியில் இருந்து மும்பைக்கு அழைத்து வந்து டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார். பல அற்புதமான நிகழ்ச்சிகளை உருவாக்கினார். ‘ஸ்வராஜ்’, ‘ஏக் கஹானி’, ‘ஷோ டைம்’ போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளை தயாரித்து, இந்திய தொலைக்காட்சி துறையின் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்தார்’ என்று கூறியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை டி.வியில் தயாரித்து வழங்கியுள்ள மஞ்சு சிங், உலகம் முழுவதும் ஏராளமான திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளார். அவரது படைப்புகள் பல சர்வதேச விழாக்களில் பங்கேற்றுள்ளன. கடந்த 2015ல் பள்ளி பாடத் திட்டத்திற்கான அவரது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டது. இதனால், ஒன்றிய கல்வி ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருந்தார். மஞ்சு சிங் திடீர் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.