மதுரை: அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இன்று காலை இறங்குகிறார். மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாசிவீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய வைபவமான மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. திருவிழாவின் 11-ம் நாளானநேற்று நடைபெற்ற தேரோட்டத்தைஒட்டி கீழமாசி வீதி தேரடியில் உள்ள சுவாமி, அம்மன் தேர்கள்பல்வேறு வண்ணத் துணிகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பக்தி கோஷத்துடன்..
கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் – பிரியாவிடை நேற்று அதிகாலை 5.50 மணிக்கு தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் சிறிய தேரில் மீனாட்சி அம்மனும், பெரியதேரில் சுந்தரேசுவரர் – பிரியாவிடையுடனும் எழுந்தருளினர். இதையடுத்து முதலில் பெரிய தேரும், சிறிது நேரத்துக்குப் பிறகு சிறிய தேரும் புறப்பட்டன. நான்கு மாசி வீதிகள் வழியாக ‘ஹரஹர சுந்தர, சம்போ சங்கர, மீனாட்சி, சுந்தர’ போன்ற பக்தி கோஷங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
பாதுகாப்பு பணியில் போலீஸார்
தேரோட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மீனாட்சி கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், கோயில் இணை ஆணையர் செல்லத்துரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையில் நான்கு துணை ஆணையர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வைகை ஆற்றில்
மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் 10 நாள் சித்திரைத் திருவிழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இதற்காக சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து கண்டாங்கி பட்டு உடுத்தி,கையில் சங்கு, சக்கரம், நேரிக்கம்பு, வளைத்தடியுடன் தந்தப் பல்லக்கில் புறப்பட்டார்.
பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 7 மணியளவில் மதுரை மூன்றுமாவடிக்கு வந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்துச் செல்லும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் கள்ளழகரை தரிசித்தனர். தொடர்ந்து புதூர், தல்லாகுளம் பகுதிகளில் உள்ள பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் இரவு சுமார் 9.30 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்தார்.
சாபம் தீர்க்கும் காட்சி
சனிக்கிழமை (நேற்று இரவு) அதிகாலை 12 மணியளவில் வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, பட்டு வஸ்திரங்களை அணிந்து அருள் பாலித்தார். பின்னர் அங்கிருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர், அதிகாலை 2.30 மணியளவில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் வழியாக வைகை ஆற்றை அடைந்த பின்பு, காலை சுமார் 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
அதைத் தொடர்ந்து 7 மணிக்கு மேல் வைகை ஆற்றில் இருந்து புறப்படும் கள்ளழகர் ராமராயர் மண்டபம், மதிச்சியம், அண்ணா நகர் பகுதிகளில் உள்ள மண்டகப் படிகளிலும் எழுந்தருளிவிட்டு இரவு வண்டியூரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலை சென்றடைகிறார்.
நாளை (ஏப்.17) 11 மணிக்கு வைகை ஆற்றுக்குள் இருக்கும் தேனூர் மண்டகப்படியில் எழுந்தருளி, மாண்டூக முனீவருக்கு சாபம் தீர்க்கும் காட்சி நடக்கிறது.