பிரிட்டன் பிரதமருக்கு ரஷ்யாவில் தடை; உக்ரைனுக்கு உதவியதால் நடவடிக்கை| Dinamalar

கீவ் : உக்ரைனுக்கு உதவி வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உக்ரைன் ராணுவத்தினரும் தாக்குதல் நடத்துகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வரும் இந்த போரில், ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையே, ரஷ்யா மீது, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள், கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களையும் வழங்கி உதவி வருகின்றன.இந்நிலையில், உக்ரைனுக்கு உதவிகள் செய்து வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சர்வதேச அரங்கில், ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், பிரிட்டன் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கவும் முயற்சிக்கிறது.’நேட்டோ’ கூட்டமைப்பின் பிரதிநிதியாக இருந்து, ராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. ரஷ்யா மீது பல தடைகளையும் பிரிட்டன் விதித்துள்ளது. இவற்றை கருத்தில் வைத்து, ரஷ்யாவுக்குள் நுழைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தடை விதிக்கப்படுகிறது. அவருடன், அந்நாட்டின் துணை பிரதமர் டாமினிக் ராப், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிராஸ், ராணுவ அமைச்சர் பென் வாலஸ், முன்னாள் பிரதமர் தெரேசா மே ஆகியோருக்கும் தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சடலங்கள் கண்டெடுப்புகருங்கடலில் இருந்த ரஷ்ய போர்க்கப்பலை, உக்ரைன் ராணுவம் ஏவுகணை வீசி தகர்த்ததை தொடர்ந்து, தலைநகர் கீவ் மீது, மீண்டும் தாக்குதல் நடத்த ரஷ்யா ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில், கீவ் நகரில் 900க்கும் மேற்பட்ட பொதுமக்களின் சடலங்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.இதில் பெரும்பாலானோர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.