படிப்பு வராத சூர்யா, நடிப்பில் சாதனை படைக்கிறார்: சிவகுமார் நெகிழ்ச்சி

தாத்தா விஜயகுமார், மகன் அருண் விஜய், பேரன் ஆர்ணவ் விஜய் இணைந்து நடிக்கும் படம் ஓ மை டாக். நாய்களை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் ஓடிடி தளத்தில் 21ந் தேதி வெளியாகிறது. படத்தின் அறிமுக விழாவில் பேசிய சிவகுமார், படிக்க வராத தன் மகன் சூர்யா நடிப்பில் சாதனை படைப்பது குறித்து பெருமையாகவும், நெகிழ்ச்சியாகவும் பேசினார். அது வருமாறு:

கடந்தாண்டு 'ஜெய் பீம்' வெளியானது. ஒரு சினிமாவை பார்த்துவிட்டு தமிழக அரசு இருளர்கள் எனும் பழங்குடியினர் எங்கெங்கு வசித்து வருகிறார்கள்? என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கணக்கெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கிறது. அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். குடும்ப அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இதுவரை நடக்காத விசயம். யாருமே அந்தப் படத்தை உருவாக்கும் போது இது நடைபெறும் என்று நினைக்கவில்லை. நடிகர் சூர்யா, நீதியரசர் சந்துரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது. என்னுடைய பார்வையில் சூர்யாவின் வாழ்க்கையில் நடித்து உச்சம் தொட்ட படம் ஜெய்பீம் தான். எனக்கும் என்னுடைய துணைவியாருக்கும் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், இந்தப் பையன் ( சூர்யா) என்ன ஆகப் போகிறான்? என்று வருத்தப்பட்ட காலம் அது. ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் நாலு வார்த்தை பேசினால் அதிசயம்தான்.

ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற பள்ளிக்கூடத்திற்கு அவனை மாற்றினோம். அங்கு எல்லாமே ஆங்கிலம் தான். இவனுக்கு தொடர்பில்லாத ஏரியா அது. வகுப்பறையில் நான்காவது வரிசையில் அமர்ந்திருப்பான். ஆசிரியர் கேள்வி கேட்டால், அப்படியே பத்தாவது வரிசைக்கு தப்பி விடுவான். பத்தாவது வரிசைக்கு கேள்வி வரும்போது, அங்கிருந்து மூன்றாவது வரிசையில் வந்து அமர்ந்து விடுவான். மூன்றாவது வரிசையில் இருக்கும் போது கேள்வி கேட்டால், கடைசி வரிசைக்கு சென்று விடுவான். வாழ்நாள் முழுவதும் கேள்வியில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டும் யோசித்த பையன்.

அதன்பிறகு கல்லூரி படிப்பிற்காக லயோலா கல்லூரிக்கு சென்றார். ஒவ்வொரு வருடமும் அரியர்ஸ் உயர்ந்தது. அப்போது அவனிடம் டிகிரியை முடிக்க வேண்டும் இல்லையென்றால்.. என கோபமாக சொன்னேன். அதன்பிறகு பாடுபட்டு படித்து, பட்டப் படிப்பை நிறைவு செய்தான். அதன் பிறகு எனக்கு படிப்பே வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

அதன் பிறகு படிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன பையன், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தான். அப்போது இயக்குநர் வசந்த் என்னை தொடர்புகொண்டு சார் உங்கள் பையனை நாயகனாக அறிமுகப்படுத்த சம்மதமா? என கேட்டார். அப்போது அவரிடம் அவனுக்கு அதுபோன்ற எண்ணம் எதுவும் இல்லை. அவனுக்கு நடனமாட தெரியாது. சண்டை காட்சிகளில் நடிக்க தெரியாது. தொடர்ச்சியாக எங்களிடமே நாலைந்து வார்த்தை பேசமாட்டான் என சொன்னேன். எனக்கும் இதுபோன்ற குணமான பையன் தான் வேண்டும் என்றார்.

டெஸ்ட் சூட்டிற்காக மணிரத்னம் அழைத்ததாக அழைத்துக் கொண்டு சென்றார். இந்தப் படம் காசி திரையரங்கில் வெளியானது. முதல் காட்சி நிறைவடைந்த பின், மிகுந்த பதட்டத்துடன் அங்கு நின்றிருந்தார். அங்கிருந்த ஒருவர் கைகொடுத்து கைகுலுக்கி 'சூப்பராக சொதப்பி விட்டீர்கள்' என விமர்சனம் செய்தார். அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

திரையுலகில் ஒன்னுமே தெரியாமல் நுழைந்த பையன். வரிசையாக இரண்டு மூன்று படங்கள் தோல்வி அடைந்தன. எட்டாவது படத்தில் பாலா என்ற ஒரு படைப்பாளி வந்து சூர்யாவை செதுக்கினார். இந்தப் பையன் தற்போது 'ஜெய் பீம்' என்றொரு படத்தை தயாரித்து, நடித்து உலகத்தையே ஜெயிக்கிறான். இது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இதெல்லாம் எனக்கு ஒரு கனவு போல் இருக்கிறது. இதெல்லாம் நம்மைவிட மேலேயிருந்து ஒருவன் பார்க்கிறான். அவன்தான் தீர்மானிக்கிறான். மனித முயற்சி மட்டும் காரணம் அல்ல. அதையும் கடந்து இறைவனின் ஆசி இருக்கிறது என நம்புகிறேன். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.