மும்பை : சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து, மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழுள்ள தன்னாட்சி நிறுவனமான, டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் புதிய விளக்கம் அளித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் சார்பில், சமீபத்தில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.அதில், சமூக ஊடகங்களில், அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட ஊழியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.இது குறித்து இந்த மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட ஊழியர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து சமீபத்தில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இது குறித்து பல தவறான புரிதல்கள் உள்ளன.அரசு ஊழியர்கள், அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட முன் அனுமதி பெற வேண்டும் என்ற சட்ட விதிகள் ஏற்கனவே உள்ளன.
அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் இருந்தன. தற்போது சமூக வலை தளங்களுக்கும் இது பொருந்தும் என்பதே அந்த புதிய உத்தரவின் நோக்கமாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement