புதுடில்லி : கொரோனாவுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாக்கப்படும் நிலையில், வெப்பத்தை தாங்கக் கூடிய புதிய தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் இந்திய நிறுவனம் ஈடுபட்டுள்ளது.கொரோனாவுக்கு எதிராக தற்போது உலகெங்கும் பல தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த தடுப்பூசிகளை, குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதனால் கூடுதல் செலவுகள் ஏற்படுகிறது.இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இந்திய அறிவியல் மையமும், ‘மின்வாக்ஸ்’ என்ற உயிரிதொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து புதிய தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த தடுப்பூசியை, 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில், நான்கு வாரங்கள் வரையிலும், 100 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில், 90 நிமிடங்கள் வரையிலும் வைத்திருக்க முடியும்.தற்போது, இந்த தடுப்பூசி எலிகளுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இது, டெல்டா, ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனாவுக்கு எதிராக மிகச் சிறந்த பலனை அளித்துள்ளதாக மின்வாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
Advertisement