டெல்லி வன்முறை; 14 பேர் கைது: சதி இருப்பதாக பாஜக புகார்

புதுடெல்லி: டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சதி இருப்பதாக பாஜக புகார் கூறியுள்ளது.

டெல்லியில் நேற்று ஜஹாங்கிர்புரி பகுதியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றோர் மீது, மற்றொரு தரப்பினர் கல்வீச்சில் ஈடுபட்டதால் கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப் பட்டன. கலவரத்தின் போது அங்கு பாதுகாப்பிற்கு வந்த போலீஸார் அவர்களை கட்டுப்படுத்தினர். கல்வீச்சில் போலீஸார் உள்பட பலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்வீச்சு மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 8 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பொதுமக்கள் காயமடைந்தனர்.

அந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.

வன்முறை குறித்து அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியின் உயர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு வன்முறையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி, உத்தரவிட்டார். வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அணில் பைலாலை சந்திக்கிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக கூறியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் ‘‘அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஏன் ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினருக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்குகிறீர்கள் என்று கேட்க விரும்புகிறேன்’’ எனக் கூறிள்ளார். வடகிழக்கு டெல்லி பாஜக எம்பி மனோஜ் திவாரி கூறுகையில், சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் அப்பகுதியில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர் எனக் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.