லண்டன்:
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். அவர் 21ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு வருகை தரும் அவர், அங்கு முன்னணி வர்த்தக நிறுவனங்களைச் சந்தித்து இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பு குறித்து விவாதிக்கிறார்.
இதையடுத்து, 22-ம் தேதி புதுடெல்லி செல்லும் போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில், இந்திய பயணம் குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:
இந்தியா ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், இங்கிலாந்திற்கு மிகவும் மதிப்புமிக்க மூலோபாய கூட்டமைப்பாகவும் உள்ளது.
எனது இந்திய பயணம் இந்தியா, பிரிட்டன் இடையே இரு நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமான விஷயங்களை வழங்கும். வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி முதல் பாதுகாப்பு வரையிலான அம்சங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையிலான மூலோபாய பாதுகாப்பு, ராஜதந்திர மற்றும் பொருளாதார கூட்டாண்மை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.