தூத்துக்குடி பாகம்பிரியாள் திருக்கோயில்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரதவீதிகளில் வலம் வந்த திருத்தேர்!

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில். இத்தல இறைவனை காசிபர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற்றுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க இவ்வழியே வந்த காசிப முனிவர் இங்கு லிங்கத் திருமேனி எழுப்பி வழிபாடு நடத்தினாராம். உமையாள், சிவபரம்பொருளிடம் திருமந்திரத்தை உபதேசிக்குமாறு கேட்டு, மந்திர உபதேசம் பெற்ற ஊர் ஆதலால், இவ்வூருக்கு ‘திருமந்திர நகர்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

திருத்தேர்

கயத்தாரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த குறுநிலமன்னனான சங்கரராம பாண்டியன், இத்தல இறைவனை தரிசித்துக் குழந்தைப் பேறு பெற்றதால் கோயில் எழுப்பினான். சங்கரராமப் பாண்டிய மன்னன் எழுப்பியக் கோயிலாததால் இத்தல இறைவனுக்கு சங்கர ராமேஸ்வரர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் சித்திரைப் பெருந்திருவிழா சிறப்பானதாகும். இந்த ஆண்டு சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 7-ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த10 நாள்களில் தினமும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெற்றது. கொரோனா தொற்றுப் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழா நடைபெறாத நிலையில், இந்தாண்டு இன்று (16-ம் தேதி) சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. காலையில், 7 மணிக்கு உற்சவ மூர்த்திகளான விநாயகர், பாகம்பிரியாள், சங்கர ராமேஷ்வரர், முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதணை நடந்தது.

தேரோட்டம்

இதனையடுத்து, சிறிய தேரில் விநாயகரும், முருகப் பெருமானும், பெரிய தேரில் பாகம்பிரியாள், சங்கரராமேஷ்வரரும் எழுந்தருளினர். தேரோட்டத்தினை மத்திய இணை அமைச்சர் முருகன், மகளிரி நலன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பஞ்ச வாத்தியங்கள் முழங்கிட கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டத்துடனும், ”சிவாய நம ஓம், நமசிவாய ” என்ற பக்தர்களிடம் கோஷத்துடனும் ரதவீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது திருத்தேர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.