புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்தில் வென்ற 8 லட்ச ரூபாய் பணத்தை அரை மணி நேரத்தில் மர்ம நபர் ஒருவனிடம் இழந்திருக்கிறார் மளிகைக் கடைக்காரர் ஒருவர்.
வில்லியனூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் ஞானசிவநேசன் என்பவர் சிறிய மளிகைக்கடை நடத்தி வருகிறார். ஓய்வு நேரங்களில் டிரீம் 11 எனப்படும் எனப்படும் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் கலந்து கொண்டு விளையாடி வந்துள்ளார்.
இதில் ஏராளமான பணத்தை இழந்துள்ள ஞானசிவநேசன், கடைசியாக விளையாடியபோது 11 லட்ச ரூபாயை வென்றுள்ளார். வரி பிடித்தங்கள் போக அவருடைய வங்கிக் கணக்குக்கு 8 லட்சம் ரூபாய் வந்துள்ளது.
மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார் ஞானசிவநேசன். சிறிது நேரத்தில் டிரீம் 11 நிறுவனத்தில் இருந்து பேசுவதாக ஒருவன் அவரது செல்போனுக்கு அழைத்துள்ளான்.
அவரது விளையாட்டு அடையாள எண் உட்பட விவரங்கள் அனைத்தையும் துல்லியமாகக் கூறிய அந்த நபர், உங்களுக்குப் பணம் குறைவாக வந்துள்ளது, எனவே வங்கிக் கணக்கு விவரங்களைக் கூறுங்கள் எனக் கேட்டுள்ளான்.
அவன் கேட்ட விவரங்களைக் கூறிக் கொண்டே வந்த ஞானசிவநேசன், வங்கியிலிருந்து வந்த ஓ.டி.பி எண்ணையும் ஆர்வக்கோளாறில் கூறியுள்ளார்.
அடுத்த நிமிடம் அவரது வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணமும் எடுக்கப்பட்டுள்ளது. தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஞானசிவநேசன். போலீசில் புகாரளித்துள்ளார்