`கடல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக கவனத்தை ஈர்த்து, வடசென்னை படத்தில் பிரபலமான நடிகர் சரண் சக்தி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கே ஜி எப் -2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த அனுபவம் குறித்து அவருடனான நேர்காணல் இதோ:
கே ஜி எப் -2 போன்ற பெரிய திரைப்படத்தில் நீங்கள் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
இவ்வளவு பெரிய படத்தில் நான் ஒரு கதாப்பாத்திரம் என்று சொல்லும்போது அதைவிட ஒரு பெரிய ப்ளெஸ்ஸிங் எதுவும் இல்லை. இதுதான் நான் நடித்த முதல் பேன் இந்தியா திரைப்படம். கே ஜி எப் செட்டை பார்க்கும்போதே ரொம்ப வியப்பாக இருக்கும். அதை ரசித்து, அந்த செட்டோடு நான் கனெக்ட் ஆகிவிட்டேன். நான் கே ஜி எப் முதலாம் பாகத்தின் மிகப்பெரிய ரசிகன். அதனால் இந்தப் படத்தில் நான் வேலை செய்யும் போது, ஒரு நடிகனாக இல்லாமல் ரசிகனாக இருந்தேன்.
செட்டில் நடிகர் யஷ்-க்கும் உங்களுக்குமான கெமிஸ்ட்ரி எப்படி இருந்தது?
கே ஜி எப் – 2 பிரஸ்மீட்டின்போது ஒட்டுமொத்த தென்னிந்திய பத்திரிகைகளும் கூடியிருந்தன. இதற்கு முன் அவ்வளவு பெரிய பிரஸ் மீட்டை நான் பார்த்ததில்லை. அப்போது ஒரு சிறிய டெக்னீசியன் நம்மைப் பற்றி பேசினாலே பெரிய விஷயமாக இருக்கும். யஷ் சார் என்னைக் குறித்து பாராட்டிப் பேசியது என் வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாத ஒன்று. சூட்டிங்கின்போதுகூட யஷ் சார் நிறைய பாசிட்டிவாக பேசுவார். கேரவனில் நிறைய விஷயங்கள் சொல்லி ஊக்குவிப்பார். என் குடும்பத்தைப் பற்றியெல்லாம் கேட்பார். அவர் அப்பாவைப் பற்றி சொல்வார். அவ்வளவு உயரங்களுக்குப் போன பின்பும்கூட அவர் இன்னும் ரொம்ப அடக்கமாக, எல்லாரிடமும் மரியாதையாக தான் பேசுவார். அதனால் தான் ‘நான் இதுவரை என் வாழ்நாளில் பார்த்ததிலேயே மிகவும் அடக்கமான மனிதர் என்றால் அது யஷ் சார் தான்’ என்று பிரஸ் மீட்டில் கூறினேன்.
இயக்குநர் பிரசாந்த் நீல் படப்பிடிப்பின்போது எப்படி இருப்பார்?
அவர் வடசென்னை படம் பார்த்து தான் என்னை இந்தப் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார். படப்பிடிப்பின்போது ரொம்ப ஜாலியாக இருப்பார். கிண்டலடித்து, கிரிக்கெட் விளையாடிக்கொண்டுதான் இருப்பார். இவ்வளவு பெரிய திரைப்படத்தை இயக்குகிறோம் என்று எந்தவித ஒரு கவலையும் அவருக்கு இருக்காது. படத்தைத் தாண்டி என்னை அவர் நன்றாக பார்த்துக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பிடப் போகும்போது கூட அழைத்து அருகில் அமர வைப்பார். எனக்கு இந்தப்படம் முழுவதுமே ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. அதற்கு காரணம் இயக்குநர் பிரசாந்த் நீல் சார் தான்.
இந்தப் படத்தில் சஞ்சய் தத் உடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது?
முதல் தடவை அவரைப் பார்க்கும்போது எனக்கே ரொம்ப பயமாக இருந்தது. கண்களில் டாட்டுவெல்லாம் வரைந்துக்கொண்டு மிரட்டலாக இருந்தார். நான் வியந்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். டயலாக் பேசும்போது அவர் இந்தியில் பேசுவார், நான் தமிழில் பேசுவேன். அவருடன் இந்தப் படத்தில் எனக்கு ஒரு முக்கியமான சீன் ஒன்று உண்டு.
வட சென்னை 2 எப்போது எதிர்பார்க்கலாம்?
உங்களைப்போல் தான் நானும். எனக்கும் வட சென்னை 2 எப்போது ஆரம்பமாகும் என்று தெரியாது. தற்போது வாடிவாசல் திரைப்படத்தில் வெற்றி சார் பிஸியாக உள்ளதால், அதை முடித்துவிட்டு கூடிய சீக்கிரம் கூப்பிடுவார் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன். தற்போது இயக்குநர் அமீர் சாருடன் இணைந்து ஒரு படம் பண்ணியுள்ளேன். அது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.