அரசின் அலட்சியத்தால் கொரோனாவுக்கு 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பு -ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி:
மத்திய அரசின் அலட்சியப் போக்கினால் கொரோனாவுக்கு 40 லட்சம் இந்தியர்கள் பலியாகியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
உலக அளவிலான கொரோனா இறப்பு எண்ணிக்கையை பகிரங்கமாக வெளியிடுவதற்கான உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் ஸ்கிரீன்ஷாட்டை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
‘மோடி உண்மையை பேசுவதில்லை, மற்றவர்களையும் பேச விடுவதில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று இன்னும் அவர் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார். மோடிஜி உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள்’ என்று ராகுல் கூறி உள்ளார்.
நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 5,21,751 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.