வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கராச்சி: ‘எனது அரசை கவிழ்க்க ஊழல்வாதிகள் மேட்ச் பிக்ஸ் செய்து செயல்பட்டனர்’ என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பில் இம்ரான் அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே தனது ஆட்சி கவிழ்ப்புக்கு அந்நிய சக்திகள் சதி செய்ததாக இம்ரான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில், இம்ரான் கான் கராச்சி நகரில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.
அதில் அவர் பேசியதாவது: என் மீது நம்பிக்கையும் அன்பும் வைத்துள்ள கராச்சி மக்களுக்கு நன்றி. நமது நாட்டிற்கு எதிராக சதி வேலை நடக்கிறது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அந்நிய சதியும் தலையீடும் உள்ளது. அதற்கு எனது அரசு பலியாகியுள்ளது. நான் எந்த நாட்டிற்கு எதிராகவும் செயல்பட்டதில்லை. இந்தியாவோ, ஐரோப்பாவோ, அமெரிக்காவோ எந்த நாட்டையும் எதிரி நாடாக நான் கருதியதில்லை. நான் உலகின் மனித நேயத்தின் பக்கம் நிற்கிறேன். நான் அனைவருடன் நட்புடன் இருக்க விரும்புகிறேன். ஆனால் அடிமையாக ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
நாட்டிற்காக பல நல்லத் திட்டங்களையும், பல பல்கலைக்கழகங்களையும் உருவாக்கியவன் நான். ஆனால், எனது அரசை கவிழ்க்க ஊழல்வாதிகள் மேட்ச் பிக்ஸ் செய்து செயல்பட்டனர். பல அரசியல் தலைவர்கள் விலைக்கு விற்கப்பட்டனர். ஊழல் புகாரில் சிக்கி பெயிலில் உள்ள நபர் ஒருவர் நாட்டின் பிரதமராகியுள்ளார். பெயிலில் இருக்கும் அவரது மகன் பஞ்சாப் மாகாண முதல்வராகியுள்ளார். இது நாட்டிற்கே வெட்கக் கேடு. இவ்வாறு அவர் பேசினார். இம்ரானின் இந்த பேரணிக்கு மக்கள் பெருமளவு கூடியது குறிப்பிடத்தக்கது.
Advertisement