மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக லிவிங்ஸ்டோன் 60 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி, 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை ருசித்தது. 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்த அந்த அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக மார்க்ராம் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் விளாசினார். நிகோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் சேர்த்தார். அபிஷேக் சர்மா 31 ரன்கள், ராகுல் திரிபாதி 34 ரன்கள் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி, 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள்பெற்று, புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.