வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, அடுத்த நான்கு மாத காலத்திற்கு தேவையான நிதியுதவி வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவிட் காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் வருகை குறைந்ததால், அந்நியசெலவானி பாதிக்கப்பட்டு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால், நாளுக்கு நாள் அந்நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகிறது. பொருளாதார நிலையை சமாளிக்கும் வகையில் இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே 2.4 பில்லியன் டாலர் கடனுதவிகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மேலும் நான்கு மாதங்களுக்கு இந்தியா நிதியுதவி வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வசேத நாணய நிதியத்திடம் உதவி
தொடர்ந்து பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதையொட்டி, சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எப்.,) பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு குழு அமெரிக்கா சென்றுள்ளது. பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் அந்த குழு கடன் உதவி கேட்க உள்ளது. இக்குழுவில் அந்நாட்டின் நிதியமைச்சர் அலி சாப்ரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இது தவிர உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட வங்கிகளிடமும் இலங்கை நிதியுதவி கேட்டு வருகிறது.
உதவி செய்ய முடிவு
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவி கிடைக்க மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை நிதியுதவி வழங்கி உதவுமாறு இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளது. பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள இலங்கையின் கோரிக்கையை ஏற்று இந்தியா உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இதனிடையே ஜப்பானும் கடனுதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு உதவி செய்ய முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை வெளிநாடுகளுக்கு ஏற்கனவே 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பாக்கி வைத்துள்ளது. இத்தொகையை தற்போது உடனே திருப்பி செலுத்த முடியாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Advertisement