வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் வறுமை பற்றிய உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கையில், அதிக அளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுடன் ஒப்பிடும் போது, சிறியளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு 10 சதவீதம் வளர்ச்சியடைவதாக கூறியுள்ளனர். அதிகளவு நிலம் வைத்துள்ளவர்களின் வருமானம் 2 சதவீதமே அதிகரிக்கிறதாம்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் வறுமை குறைந்துள்ளது ஆனால் முன்பு நினைத்த அளவு இல்லை என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. உலக வங்கியின் இந்த ஆய்வறிக்கையினை பொருளாதார வல்லுனர்கள் சுதிர்தா சின்ஹா ராய் மற்றும் ராய் வேன் டெர் வைட் எழுதியுள்ளனர்.
இந்த ஆய்வறிக்கைகளின் நோக்கம் வளர்ச்சி குறித்த கருத்து பரிமாற்றத்தை ஊக்குவிப்பது மற்றும் ஆய்வு கண்டுபிடிப்புகளை விரைவாக பரப்புவது ஆகும். கடந்த வாரம் வெளியான ஐ.எம்.எப்., அறிக்கை, இந்தியாவில் இலவச உணவு தானியத் திட்டம் 2020ல் தீவிர வறுமையை 0.86 சதவீதமாகக் கட்டுப்படுத்தியதாகக் கூறியது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள உலக வங்கி அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2011 முதல் 2019 வரை கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமை முறையே 14.7 மற்றும் 7.9 சதவீதம் குறைந்துள்ளது. நகர்ப்புற இந்தியாவை விட கிராமப்புறங்களில் வறுமை அளவு அதிகம் குறைந்துள்ளது. கிராமப்புற வறுமை 2011ல் 26.3 சதவீதமாக இருந்தது. அது 2019ல் 11.6% ஆகக் குறைந்துள்ளது. அதே சமயத்தில் நகர்ப்புற வறுமை 14.2 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாக குறைந்துள்ளது.
2016ல் நகர்ப்புற வறுமை 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அது தற்செயலாக பணிமதிப்பிழப்புடன் ஒத்துப்போகிறது. கிராமப்புற வறுமை 2019ல் 10 அடிப்படை புள்ளிகள் உயர்ந்தன. அது தற்செயலாக பொருளாதார மந்தநிலையுடன் ஒத்துப்போகிறது. 2013 மற்றும் 2019ல் நடந்த இரண்டு கட்ட ஆய்வில் சிறியளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளின் ஆண்டு வருமானம் 10 சதவீதம் வளர்ந்துள்ளது. பெரியளவு நிலம் வைத்திருப்பவர்களின் வருமானம் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளனர்.
Advertisement