ஜெருசலேம்-ஜெருசலேமில், அல் அக்சா மசூதிக்குள் இருந்தவாறு கோஷமிட்ட பாலஸ்தீனர்களை, இஸ்ரேல் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின், வன்முறையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.மேற்காசிய நாடான இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு, யூதர்களும், முஸ்லிம்களும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால் யூதர்கள் பெரும்பான்மையினராக உள்ள இஸ்ரேலுக்கும், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்நிலையில், 15ம் தேதி அதிகாலை, ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்கு வந்த பாலஸ்தீனர்கள், மசூதிக்கு அருகில் இருக்கும் யூதர்களின் புனித சுவர் மீது கற்களை வீசினர். அங்கு வந்த போலீசார் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பிற்கும் இடையில் நடந்த மோதலில் பலர் காயம்அடைந்தனர்.அந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், மசூதிக்கு வெளியே இருந்த பாலஸ்தீனர்களை நேற்று அதிகாலை இஸ்ரேல் போலீசார் அப்புறப்படுத்தினர்.
எனினும் மசூதிக்குள் இருந்தபடி, பல பாலஸ்தீனர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து, மசூதி வளாகத்திற்குள் நுழைந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில், 10 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement