புதுடில்லி: நாடு முழுதும் எலுமிச்சை பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை அடுத்து, குஜராத்தில் திருமணம் ஒன்றில், மாப்பிள்ளைக்கு எலுமிச்சை பழங்களை பரிசாக கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
நாடு முழுதும் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கி உள்ளதை அடுத்து, எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் எலுமிச்சை வரத்து இந்தாண்டு குறைந்துள்ளது. இதனால் எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துஉள்ளது.வட மாநிலங்களில் ஒரு பழம் 10 – 15 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ 200 – 250 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள தோராஜி என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், மாப்பிள்ளைக்கு பலர், பெட்டி பெட்டியாக எலுமிச்சை பழங்களை திருமண பரிசாக அளித்தனர். ‘இந்த கோடை காலத்தில் எலுமிச்சை பழங்களின் தேவை தவிர்க்க முடியாதது. ஆனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதை பரிசாக அளித்தோம்’ என, திருமணத்துக்கு வந்தவர்கள் தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Advertisement