கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில், முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
வெங்கடேசன் – சுபா தம்பதியினருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளுக்குப் பின் பெண் குழந்தை பிறந்த நிலையில், பெண் குழந்தை வேண்டாம் என வெங்கடேசன் ஓராண்டாகப் பிரிந்து இருந்துள்ளார். இந்நிலையில், வெங்கடேசன் 8 மாதங்களுக்கு முன் தன் உறவுக்கார பெண்மணியை திருமணம் செய்ததும், அந்த பெண் தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளதும் சுபாவிற்கு தெரியவந்தது.
கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, விருத்தாசலம் மகளிர் காவல் நிலையம் முன் சுபா கைகுழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சுபாவை சமாதானப்படுத்தி அவர் அளித்த புகாரை விசாரித்த போலீசார் வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.