வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-‘இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளுக்கும் பயனுள்ள வகையில் பேச்சு நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது’ என, அந்நாட்டின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் பதவியேற்றார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘பயங்கரவாதத்தில் இருந்து தெற்காசிய பகுதி முழுமையாக விடுபட்டு அமைதியும், நிலைதன்மையும் நிலவ வேண்டும். ‘அப்போதுதான் வளர்ச்சியிலும், மக்களின் நலனிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியும்’ என கூறிஇருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் ஷெபாஸ் ஷெரீப் கூறியிருப்பதாவது:உங்கள் வாழ்த்துக்கு நன்றி. இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு வைத்திருக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு – காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்னைகளுக்கும் இந்தியாவுடன் பயனுள்ள வகையில் பேச்சு நடத்த, பாகிஸ்தான் விரும்புகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் செய்துள்ள தியாகங்கள், அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Advertisement