வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-எல்லை பாதுகாப்புப் படையில் இந்த ஆண்டின் முதல் மூன்றரை மாதங்களில், 9,550 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் சி.ஏ.பி.எப்., எனப்படும் மத்திய ஆயுத காவல் படையின்கீழ், பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்புப் படை, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட ஏழு படைப் பிரிவுகள் உள்ளன.இதில் இந்தியா – பாகிஸ்தான் மற்றும் இந்தியா – வங்கதேசம் எல்லை பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் பி.எஸ்.எப்., படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள், எல்லை பகுதியில் அத்துமீறி நுழையும் பயங்கரவாதிகளை ஒடுக்குவது, போதைப் பொருள் கடத்தலை தடுப்பது ஆகிய பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு இப்படைப் பிரிவில் இணைந்துள்ள வீரர்கள் குறித்த விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து மூத்த பி.எஸ்.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:பி.எஸ்.எப்., படையில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், ஏப்ரல் 13 வரையிலான மூன்றரை மாதங்களில், 9,550 பேர் இணைந்துள்ளனர். இதில், 1,700 பேர் பெண்கள். வரும் நாட்களில் பயிற்சி முடிக்கும் மேலும் சில வீரர் வீராங்கனையரும் படையில் இணைக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement