நீங்கா நினைவுகளில் நடிகர் விவேக் : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

நடிகர் விவேக்கை ஒரு காமெடியனாக நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு இயக்குனராகும் லட்சியத்தோடு தான் சினிமாவிற்கு வந்தவர் அவர். இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு வெளியான 'மனதில் உறுதி வேண்டும்' என்கிற படத்தில், எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறார். அதன்பின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார். சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். இவர் தனது காமெடி உடன் சமூக கருத்துக்களையும் எடுத்துரைத்தார். அதனாலேயே சின்னக்கலைவாணர் என சினிமாவில் எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

சினிமாவை தாண்டி இயற்கை சூழலில் ஆர்வம் கொண்டவர். ஒரு மனிதன் பூமியில் உயிர் வாழ மூலாதாரமான உள்ளது அவன் சுவாசிக்கும் காற்று தான். மரம் நட வேண்டும் என்று அப்துல் கலாம் அவர்கள் வலியுறுத்தியதை தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக எடுத்து கொண்டு செயல்பட்டவர் நடிகர் விவேக். இதுவரை சுமார் 30 லட்சம் மரங்களை நட்டுள்ளார்.

கலாம் சொன்னதாலும் தாவரங்களை நேசித்தார், மரங்களை நட்டார், சமூப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார், திரைத்துறையில் பலருக்கும் உதவியுள்ளார், புத்தகங்கள் வாசிப்பதிலும், இசையிலும் ஆர்வம் உள்ளவர், சில இசைக்கருவிகளை வாசிக்கவும் தெரிந்தவர், சினிமாவில் பாடியும் உள்ளார்.

நடிப்பைத் தாண்டி மிகவும் பிரபலமான குளிர்பானமாக இருந்த மிராண்டா மற்றும் பிரபல நகை நிறுவனம் ஒன்றிலும் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் விவேக் இருந்துள்ளார். அதே போல் தமிழகத்தில் பிளாஸ்டிக் உபயோகம் அதிகமாக இருந்ததால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல விதத்தில் முயற்சி செய்து வந்த நிலையில், அதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கினர். இந்த கமிட்டிகள் அம்பாசிடராக நடிகை ஜோதிகாவும் விவேக்கும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நன்மைகளை செய்த நடிகர் விவேக் கடந்த ஆண்டு இதே நாளில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னர் கூட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றார். அவர் மண்ணை விட்டு மறைந்து ஓராண்டாகிவிட்ட நிலையில் அவர் தந்த படைப்புகள் என்றும் நம் நினைவில் வாழும் என்பதே உண்மை.

உருவப்படம் திறப்பு
விவேக்கின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் உருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ. பி.எஸ். அவர்களும் திறந்து வைத்தனர். மேலும் விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் இன்று விவேக்'ஸ் கிரீன் கலாம் என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை விவேக்கின் நண்பரும், நடிகருமான செல் முருகன் தொடங்கினார். நடிகர்கள் பாபி சிம்ஹா, உதயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.