பாகூர்:சாலையோர மின் கம்பத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு, நள்ளிரவில் போக்குவரத்து பாதித்தது.
புதுச்சேரி -கடலுார் சாலை, முள்ளோடையில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது நேற்று முன்தினம் நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.இதில், மின் கம்பம் முறிந்து, மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு, சாலையின் குறுக்கே தொங்கியது.இதனால், பாகூர் பகுதியில் உள்ள கிராமங்களிலும் மின்சாரம் தடைபட்டது.
அவ்வழியாக ரோந்து சென்ற கிருமாம்பாக்கம் போலீசார் மணிவண்ணன், அரி, பழனிச்சாமி, ஞானமூர்த்தி ஆகியோர் மின் கம்பி அறுந்து கிடப்பதை கண்டு, அவ்வழியாக செல்ல முயன்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி, மாற்று பாதையில் அனுப்பினர்.இது குறித்து மின் துறைக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்படது.
சம்பவ இடத்திற்கு வந்த மின்துறை ஊழியர், போலீசார் உதவியுடன் மின் கம்பிகளை சீரமைத்தனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. விரைந்து செயல்பட்ட ரோந்து போலீசாரைபொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டினர்.விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement