சன்மார் குழும தலைவர் சங்கர் காலமானார்

சென்னை: சன்மார் குழுமத் தலைவர் என். சங்கர் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 76.

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட சன்மார் குழுமம்,இரசாயனம், கப்பல் சரக்கு, பொறியியல், உலோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வணிகம் செய்து வருகிறது. இக்குழுமத்தின் தற்போதைய மதிப்பு ரூ.12,500 கோடி ஆகும். சன்மார் குழுமத்தின் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில், 1975 முதல் 2004 வரையில் சங்கர் இருந்தார். 1998 முதல் 2004 வரையில் அந்நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். அதன் பிறகு 2004 முதல் சன்மார் குழுமத்தின் தலைவர் பொறுப்பு வகித்தார்.

தீவிர விளையாட்டு ரசிகரான சங்கர், அகில இந்திய டென்னிஸ் கழகத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் கழகத்தின் தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.

சங்கரின் மறைவு குறித்து டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன் கூறுகையில் ‘தென் இந்திய தொழில் துறையின் முன்னோடி நபர்களில் ஒருவர் சங்கர். சன்மாரை உலக அளவில் முன்னணி நிறுவனமாக மாற்ற பங்காற்றினார்’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.