‘இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்’ – சாமியார் பேச்சால் சலசலப்பு

“இந்தியா முஸ்லிம் நாடாக மாறுவதை தடுக்க இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று இந்து சாமியார் யதி சத்யதேவானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தில் உள்ள முபாரக்பூர் பகுதியில் ‘தரம் சன்சத்’ என்ற பெயரில் இந்து மத மாநாடு ஒன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மடங்களின் தலைவர்கள், சாமியார்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
image
இதனிடையே, இந்த மாநாட்டில் நேற்று பேசிய சாமியார் யதி நரசிங்கானந்த், “இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பெரும் கண்டனங்களுக்கு உள்ளானது. இவர் ஏற்கனவே இதுபோன்ற வெறுப்புணர்வு ஊட்டும் வகையில் பேசியதாக கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார். கடந்த மாதம் ஹரித்துவாரில் நடைபெற்ற கூட்டத்தில், “முஸ்லிம்களை படுகொலை செய்ய வேண்டும்” என அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சாமியார்…
இந்நிலையில், நரசிங்கானந்த் சரஸ்வதியின் இந்த பேச்சு குறித்து இமாச்சல் மாநாட்டில் கலந்து கொண்ட மற்றொரு இந்து சாமியார் யதி சத்யதேவானந்த் சரஸ்வதியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர்.
image
அதற்கு பதிலளித்த அவர், “இந்துக்கள் அதிகமாக இருக்கும் காரணத்தாலேயே இந்தியா ஜனநாயக நாடாக இருந்து வருகிறது. ஆனால், எதிர்காலத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் நாட்டில் பெருகி விடுவார்கள். அப்படி நடந்தால், இந்தியா முஸ்லிம் நாடாக மாறிவிடும். இதனைத் தடுக்கவே இந்துக்களை அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். உண்மையை பேச யாருக்கும் பயப்பட தேவையில்லை. இது எங்கள் மாநாடு. அரசாங்கம் எங்களை கட்டுப்படுத்த முடியாது” என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.