பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் நடைபெற்று வரும் பயோ மைனிங் பணிகளை விரைந்து முடிக்க சென்னை மேயர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயிரி அகழ்ந்தெடுத்தல் (Bio-Mining) பணியினை மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இந்தத் திடக்கழிவுகள் மக்கும், மக்காத கழிவுகளாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகிறது.
பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகமானது 225 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் நீண்ட நாட்களாக கொட்டிக் கிடக்கும் குப்பை 34.02 இலட்சம் கன மீட்டர் அளவில் உள்ளது. இந்த வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள் தற்சமயம் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் (Bio Mining) களையப்பட்டு அவற்றிலிருந்து கல், மணல், இரும்பு, மரக்கட்டைகள், கண்ணாடி, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தனித்தனியாக பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணியானது ரூ.350.65 கோடி மதிப்பீட்டில் 11 உயிரி அகழ்ந்தெடுக்கும் மையங்களின் மூலம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் அவர்கள் பணிகளை குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.