திமுக தலைவர் ஸ்டாலின், அவரின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோருக்கு எதிராக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தொடர்பு இருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
ஸ்டாலினின் இந்த பேச்சு தனியார் தொலைக்காட்சிகளிலும், தமிழ் வார இதழ்களிலும் செய்தியாக வெளியிட்டிருந்தது.
உண்மைக்கு புறம்பான தகவலை ஸ்டாலின் பேசியதாக, அவர் மீதும், அவரின் மருமகன் மீதும், தனியார் தொலைக்காட்சி மற்றும் வார இதழ்களின் மீது பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் தனது பெயரை நீக்க கோரி ஸ்டாலின் மருமகன் சபரீசன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் சபரீசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
“கலைஞர் தொலைக்காட்சிக்கும் சபரீசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால், இந்த வழக்கிற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து சபரீசன் பெயரை நீக்க வேண்டும்” என வாதம் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மானநஷ்ட ஈடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.