குழந்தை ஆபாச படங்களை தடுக்க சர்வதேச போலீஸ்| Dinamalar

புதுடில்லி, : குழந்தை ஆபாச படங்கள் தொடர்பான தகவல்களை பரிமாறும், சர்வதேச போலீஸ் அமைப்பான ‘இன்டர்போல்’ குழுவில், சி.பி.ஐ., இணைந்துஉள்ளது.ஐரோப்பிய நாடான பிரான்சின் லியான் நகரை தலைமையிடமாக வைத்து, இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு செயல்படுகிறது.

குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களை, சமூக வலை தளங்கள் உள்ளிட்டவற்றில் வெளியிடுவதை தடுக்கும் வகையில், இன்டர்போலில் தனிப் பிரிவு உள்ளது. இதில், 66 நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில், சி.பி.ஐ., எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பும் சமீபத்தில் இணைந்துள்ளது.இதையடுத்து, புகைப்படங்களை ஒப்பிட்டு பார்க்கும் கம்ப்யூட்டர் மென்பொருள் வசதி, சி.பி.ஐ.,க்கு கிடைக்கும்.

இதன் வாயிலாக, குற்றவாளிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் எளிதில் அடையாளம் காண முடியும்.ஏற்கனவே ஒரு நாட்டில் அடையாளம் காணப்பட்டிருந்தால், அந்தத் தகவலையும் தெரிந்து கொள்ள முடியும். இதன் வாயிலாக, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது, ஆபாச படங்களை நீக்குவது போன்றவற்றில், இக்குழுவில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட முடியும்.இன்டர்போலின் இந்த குழுவின் வாயிலாக, இதுவரை, 27 ஆயிரம் பாதிக்கப்பட்டோர் மற்றும் 12 ஆயிரம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.