லாகூர் : பாகிஸ்தானில், இலங்கை நாட்டவரை படுகொலை செய்த ஆறு பேருக்கு, பாக்., நீதிமன்றம் மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில், கடந்த டிசம்பரில், ஒரு ஆடை தயாரிப்பு தொழிற்சாலைக்குள் புகுந்த, 800க்கும் மேற்பட்ட நபர்கள், அந்த ஆலையை சூறையாடினர்.
மேலும், அதன் பொது மேலாளராக வேலை பார்த்த இலங்கையை சேர்ந்த பிரியந்தா குமாரா, 47, என்பவரை அடித்துக்கொன்றனர். பின் அவரின் உடலை தீவைத்து எரித்தனர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த சம்பவத்தில் தொடர்புடைய, 80 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து விசாரித்து வந்த லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், முக்கிய குற்றவாளிகளான ஆறு பேருக்கு, நேற்று மரண தண்டனை விதித்தது.
ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும், மீதமுள்ள, 67 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. இவர்கள் தவிர ஒன்பது சிறார் குற்றவாளிகள் குறித்த விசாரணை முடிவடையாததால் அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்படவில்லை.
Advertisement