காந்திநகர்:
மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று குஜராத் சென்ற பிரதமர் மோடி காந்திநகரில் உள்ள பள்ளிகளுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அப்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் காணொலி மூலம் பிரதமர் கலந்துரையாடினார். தற்போதைய ஆன்லைன் தொழில்நுட்பத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அனுபவம் மற்றும் ஆர்வம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
ஆன்லைன் நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம் என்றும், சமூக வாழ்க்கை, விளையாட்டு ஆகியவற்றை தவிர்க்க கூடாது என்றும் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் விளையாட்டு என்பது கல்வியின் ஒரு பகுதியே தவிர, கூடுதல் பாடத் திட்டம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
இளம் பருவத்தினர், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் மாணவர்களின் கலோரி தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இதையும் படியுங்கள்…தேர்தல் வியூகம்: சோனியா காந்தியுடன், பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆலோசனை