ஹைதராபாத்: சமீப காலமாக மத்திய அரசின் கொள்கைகளையும் பிரதமர் மோடியையும் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தீவிரமாக விமர்சித்து வருகிறார். பட்ஜெட் கூட்டத்தொடரை ஆளுநரின் உரையின்றி நடத்தினார்.
இந்நிலையில் டெல்லி சென்ற ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் முறையிட்டார். இதையடுத்து, ஆளுநர் தமிழிசை விரைவில் தெலங்கானா அரசை கலைக்க உள்ளார் என பேச்சு அடிபட்டது. இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மற்ற மாநிலங்களில் அரசுக்கு ஆளுநருடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், ராஜ்பவனுக்கு கொடுக்கும் மரியாதை கொடுக்கப்பட்டுதான் வருகிறது. ஆனால் இங்கு இல்லை. நான் ஆளுநராக மட்டுமே பணியாற்றி வருகிறேன். எனக்கு அரசியல் செய்ய தேவையில்லை. ஆனால் இங்கு, நான் அரசியல் செய்கிறேன் என குற்றம் சாட்டுகின்றனர். ஆளுநருக்கு மரியாதை கொடுக்காத விஷயம் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். நான் தெலங்கானா அரசை கவிழ்ப்பேன் என எங்கும் கூறவில்லை. என் பேச்சை திரித்து கூறுகின்றனர்”. இவ்வாறு ஆளுநர் தமிழிசை கூறினார்.