இந்தியாவில் 1,247 பேருக்கு கரோனா: கேரளாவிடம் அன்றாட அறிக்கை கோரியது மத்திய அரசு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,247 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 43% குறைவு. இதற்கிடையில் கேரள மாநிலம் தனது அன்றாட கரோனா பாதிப்புகளை அன்றன்றைக்கே அனுப்பிவைக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதிக்குப் பின்னர், 5 நாட்கள் இடைவெளி விட்டு கேரளா தனது அன்றாட கரோனா பாதிப்பை தொகுத்து அனுப்பியதாலேயே திடீரென்று ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி 2,183 பேருக்கு தொற்று உறுதியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் இந்தியாவில் XE திரிபு பரவத் தொடங்கியதோ என்ற சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதிக்குப் பின்னர், 5 நாட்கள் இடைவெளி விட்டு கேரளா தனது அன்றாட கரோனா பாதிப்பை தொகுத்து அனுப்பியதாலேயே திடீரென்று ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது தெரியவந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இது குறித்து எழுதியுள்ள குறிப்பில், “கேரள மாநிலம் ஏப்ரல் 13 ஆம் தேதிக்குப் பின்னர் 5 நாட்கள் இடைவெளிவிட்டு நேற்றுதான் பாதிப்பு எண்ணிக்கையை அனுப்பியுள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை, தொற்று பரவல் விகிதம் என எல்லாமே அதிகரித்துள்ளது. இதனால் பதற்றம் உருவானது. அன்றாடம் கிடைக்கும் டேட்டாக்கள் தான் கரோனா பரவலை பாதிப்பை துல்லியமாகக் கணிக்க உதவும். எனவே இனிமேல் கேரளா அன்றாடம் தொய்வில்லாமல் அறிக்கையை அனுப்பவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 213 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேர பாதிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,247 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,30,45,527 என்றளவில் உள்ளது. மேலும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 11,860 ஆக அதிகரித்துள்ளது. 928 பேர் நோயில் இருந்து மீண்டனர். இதனால் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,11,701 என்றளவில் உள்ளது. கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,966 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் புதிதாக 501 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஹரியானாவில் மீண்டும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.