நான் செய்த தவறுகளால் தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது- அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் விலை வாசி கடுமையாக உயர்ந்தது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி அதிபர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். கோத்தபய ராஜபக்சே பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து கட்சிகளை இணைத்து அரசை அமைக்க அதிபர் கோத்தபய அழைப்பு விடுத்தார். இதற்காக ராஜபக்சே அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது. அதன்பின் 4 பேர் புதிய மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர்.

ஒற்றுமையாக அரசை அமைக்க கோத்தபய விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தனர். இதனால் புதிய மந்திரி சபை அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு 17 புதிய மந்திரிகளை நேற்று கோத்தபய ராஜபக்சே நியமித்தார். அவர்கள் உடனே பதவியேற்று கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசியதாவது:-

கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெரிய சவால்களை சந்தித்துள்ளோம். கொரோனா தொற்று, கடன் சுமை, ஏற்பட்டது. மேலும் எங்கள் பக்கத்திலும் சில தவறுகள் உள்ளன.

இலங்கை விவசாயத்தை முழுமையாக இயற்கையாக மாற்றும் முயற்சியில் ரசாயன உரத்தை தடை செய்திருக்கக் கூடாது. ரசாயன உரத்தை தடை விதித்ததன் மூலம் நான் தவறு இழைத்துவிட்டேன். சர்வதேச நாணய நிதியத்தை அரசாங்கம் ஆரம்பத்திலேயே அணுகி இருக்க வேண்டும். இன்று பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் அழுத்தத்தில் இருக்கிறார்கள். இந்த நிலைமைக்கு நான் வருந்துகிறேன்.

அதிக விலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது அவர்களின் வலி, கோபம் நியாயமானது. கடந்த காலத்தில் என்ன குறைகள் ஏற்பட்டு இருந்தாலும் தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராகிய எனது பொறுப்பாகும். எந்த சிரமத்திற்கும், சவாலுக்கும் மத்தியிலும் அந்த பொறுப்பில் இருந்து விலக மாட்டேன் என்று என்னை தேர்ந்தெடுத்த மக்களிடம் உறுதிஅளிக்கிறேன்.

தற்போது நாம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதை தீர்க்காமல் வேறு எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஏற்கனவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன்.

அரசுக்கு ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளேன். இந்த குழுவுடன் இணைந்து சில நாட்களாக பொருளாதாரத்தை மீண்டும் நிலை நிறுத்த பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

எண்ணை, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியாவிடம் இருந்து கடன் வசதிகளை பெற்றுள்ளோம்.

மேலும் எரிவாயு, உரம் மற்றும் மருந்து பொருட்கள் இறக்குமதிக்கு ஒத்துழைப்பு வழங்க உலக வங்கி முன் வந்துள்ளது.

மக்களுக்கு தேவையான எண்ணை மற்றும் எரிவாயு தற்போது கிடைத்தாலும் சமீப நாட்களாக முறையாக விநியோகிக்கப்படவில்லை. மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

எனது அரசாங்கம் தவறுகளை செய்துள்ளது. நாட்டின் நன்மைக்காக முன்னோக்கி செல்ல அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இலங்கையில் ரசாயன உரத்தை மீண்டும் அனுமதிக்க கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில் ராஜபக்சே குடும்பத்தினர் இடம் பெறவில்லை. அதிபர் கோத்தபய, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் மட்டுமே அரசில் நீடித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்..
ஒமைக்ரான் வைரசால் குழந்தைகளுக்கு சுவாச பாதை தொற்று பாதிப்பு- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.