ரயில்வே துறையை மேம்படுத்த ஒன்றிய அரசு தவறிவிட்டது: சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல்

டெல்லி: இந்தியாவில் ரயில்களின் வேகமும், சரியான நேரத்தில் இலக்கை அடையும் சதவிகிதமும் வெகுவாக குறைந்திருப்பதாக தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில் ஒன்றிய அரசு ரயில்வே துறையை மேம்படுத்த தவறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 200 ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தினாலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ரயில்களின் சராசரி வேகத்தை மணிக்கு 50ல் இருந்து 75 கிலோ மீட்டராக உயர்த்த ரயில்வே  நிர்வாகம் திட்டமிட்டாலும் உள்கட்டமைப்பு குறைபாடுகளால் வேகம் உயரவில்லை என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பு 7 ஆண்டுகளில் ரயில்களின் வேகத்தை ஆய்வு செய்ததில் 2.1% எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணிக்கு 75-கிலோ மீட்டரை விட அதிகமாகவும் 37% எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணிக்கு 55 முதல் 75 கி.மீ. வேகத்திலும் 9.4% ரயில்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் சிறிது உயர்ந்திருந்தாலும் அதன் எதிரொலியால் பயணிகள் ரயில்களின் வேகம் வெகுவாக குறைந்தது தெரிய வந்துள்ளது. இது போன்ற குளறுபடிகளால் 7 ஆண்டுகளில் 69% ரயில்கள் மட்டுமே சரியான நேரத்தில் இலக்கை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்கள் தாமதமாவதாலும், ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் சிக்கல் சிலவுவதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.