நம்பிக்கை அளித்த திலக் வர்மா- சென்னை அணிக்கு எதிராக 155 ரன்கள் சேர்த்தது மும்பை

மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33வது ஆட்டம் இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, துவக்கத்தில் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகினர். அவர்களின் விக்கெட்டை முகேஷ் சவுத்ரி கைப்பற்றினார். பிரெவிஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய சூர்யகுமார் யாதவ், 32 ரன்கள் சேர்த்தார். இதனால் 47 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது மும்பை.
ஹிருத்திக் ஷாக்கீன் 25 ரன்களிலும், கிரன் பொல்லார்ட் 14 ரன்களிலும், டேனியல் சாம்ஸ் 5 ரன்களிலும் வெளியேறினர். அதேசமயம், மறுமுனையில் விக்கெட்டை காப்பாற்ற போராடிய திலக் வர்மா அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தார்.
இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் என்ற கவுரவமான இலக்கை எட்டியது. திலக் வர்மா 51 ரன்களுடனும், ஜெய்தேவ் உனாத்கட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 
சென்னை அணி தரப்பில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட் வீழ்த்தினார். பிராவோ 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.