வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்ட நான்கு கட்டளைகளுக்குப் பாராளுமன்றம் இன்று (21) அனுமதி வழங்கியது.
இதற்கமைய, 2021.11.23 திகதிய 2255/8 ஆம் இலக்க, 2021.12.21ஆம் திகதிய 2259/9 ஆம் இலக்க, 2021.12.31ஆம் திகதிய 2260/72 ஆம் இலக்க, 2022 சனவரி 11 ஆம் திகதிய 2262/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டளைகள் விவாதம் இன்றி சபையில் அங்கீகரிக்கப்பட்டன.
கீழ்வரும் இணைப்புக்களில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களைப் பார்வையிடலாம்
http://documents.gov.lk/files/egz/2021/11/2255-08_T.pdf
http://documents.gov.lk/files/egz/2021/12/2259-09_T.pdf
http://documents.gov.lk/files/egz/2021/12/2260-72_T.pdf
http://documents.gov.lk/files/egz/2022/1/2262-15_T.pdf
பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு கூடியதுடன், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளுக்கு இணங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்றைய தினத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த வாய்மூல விடைக்கான கேள்விகள் பிறிதொரு நாளுக்கு ஆற்றுப்படுத்தப்படும் என சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் 21வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கான தனிநபர் சட்டமூலம் இன்று முற்பகல் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசியலமைப்பைத் திருத்துவது தொடர்பில் ஆராயும் நோக்கில் பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் பங்குகொண்ட விசேட கூட்டம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்தன அவர்களின் தலைமையில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்றது.
தற்போதைய நெருக்கடி நிலை குறித்து மாலை 4.30 மணி வரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
பி.ப 4.30 மணிவரை நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குணதிலக ராஜபக்க்ஷ, கொவிட் 19 நிலைமையினால் பாடசாலைகளின் பாடவிதானங்களைப் பூர்த்திசெய்ய முடியாமல்போனமை மற்றும் பரீட்சைகள் நடத்த முடியாமல் போனமை குறித்து கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன பல்கலைக்கழகங்களினால் நடத்தப்படும் அமைதிப் போராட்டங்களுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். இவற்றுக்குப் பதில்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சபை நாளை (22) மு.ப 10.00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.