புதுடெல்லி: பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை ெதாடர்ந்து டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைநகர் டெல்லியின் ரோகிணி நீதிமன்றத்தில் இன்று காலை வழக்கம் போல் நீதிமன்றப் பணிகள் தொடங்கின. நீதிமன்ற வளாத்தில் நடந்த பாதுகாப்பு சோதனையின் போது வழக்கறிஞர்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடத் தொடங்கினர். தகவலறிந்த மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வழக்கறிஞர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் ரோகிணி நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே ரோகிணி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் ரவுடி கும்பலுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, நீதிமன்ற வளாகத்தில் ஜிதேந்திர கோகி என்பவரை இரண்டு மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். ஆனால், பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்திய இருவரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்தால் ரோகிணி நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
