தமிழ்நாட்டில் ஊரடங்கை அமல்படுத்துவதற்கும், கட்டுப்பாடுகள் தீவிர படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என தமிழ்நாட்டின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
நோய் கட்டுப்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. ஐஐடியில் 79 ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை மேலும் 32 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது என்று நல்வாழ்வு துறை செயலாளர் கூறினார்.
சென்னை ஐஐடியில் மொத்தமுள்ள 7490 மாணவர்களில் 3080 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 3080 பேரில் 111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 109 சிகிச்சையில் உள்ளனர் என கூறினார்.
தொடர்ந்து பேசிய செயலாளர் ராதாகிருஷ்ணன் 27 மாவட்டங்களில் தொற்று இல்லை. 9 மாவட்டங்களில் ஆங்காங்கே பரவல் உள்ளது. 1.48 கோடி பேர் இரண்டாம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. உடனடியாக மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் கவலை பட வேண்டிய கட்டத்தில் இல்லை. அக்கறை காட்ட வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்றும் தர்மபூரி, ராணிப்பேட்டை, மதுரை, திருப்பத்தூர்இ நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக உள்ளது என செயலாளர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் 1000 பேரில் 3 பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகிறது என்றும், கடந்த மார்ச் 2020 ஒப்பிட்டு பார்க்கும் போது பல்வேறு அனுபவங்கள் கிடைத்துள்ளது. பொது இடங்களில் முககவசம் அணிவதுஇ தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டும்தான் தற்போது வல்லுநர்கள் கருத்தாக இருப்பதாக நல்வாழ்வு துறை செயலாளர் கூறினார்.